Thursday, March 31, 2005

@#$%^ அப்படின்னா என்ன மம்மி...!?

குழந்தைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...

நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.

Image hosted by Photobucket.com

யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?

குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?

அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?

குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.

உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:

உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:

பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.

செயல்விளக்கம் கொடுங்கள்:

ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.

உண்மையைச் சொல்லுங்கள்:

கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.

எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)

அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:

உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:

கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.

பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:

உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.

தேடுங்கள் கிடைக்கும்:

எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.

சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.