Friday, October 28, 2005

இந்தியாவும் சிங்கப்பூரும், இந்தியரும் சிங்கப்பூரரும்...

சமீப காலங்களில் நான் கேள்விப்படும் சேதிகள் மூலம் இந்தியாவும் சிங்கப்பூரும் முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளியல் ஒத்துழைப்புடன் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தக் கலாச்சார, பொருளியல் தொடர்புகள் பல காலமாக இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் கையெழுத்திடப்பட்ட (29 ஜீன் 2005) சிங்கப்பூர்-இந்தியா பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (Comprehensive Economic Cooperation Agreement (CECA) இதற்கும் பெரும் ஆதராமாக விளங்குகிறது. இந்தியா இம்மாதிரி ஒப்பந்தம் வெளிநாட்டொன்றுடன் செய்துகொள்வது இதுதான் முதல் முறை.

இந்த ஒப்பந்தத்தின் முழுப்பிரதியும், முன்னர் நடந்த கடிதப்பரிமாற்றங்களும் இங்கே...

இந்த ஒப்பந்தத்தின் பயனாக நான் கண்கூடாக கவனித்துவரும் மாற்றங்கள் சிலவற்றை, நான் சிங்கை ஊடகங்கள் மூலம் அறிந்த அளவில், எனக்குத்தெரிந்த/புரிந்த அளவில் இங்கு பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சி. இது தொடர்பான மேல் விபரங்களையும், இந்தப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன், நன்றி.

கல்வித்துறை:

சமீபத்தில் சிங்கையின் கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும், சில பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர்களும் டெல்லி, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு பயணித்து அங்குள்ள பல பள்ளிகளுக்கு வருகைதந்து அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று தெரிந்துவந்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.

சிங்கையின் திரு. கண்ணப்பன் செட்டியார் அவர்களின் ஸ்டேன்ஷ்ஃபீல்ட் சென்னையில் ஒரு வெளிநாட்டுக்கல்வி அளிக்கும் ஒரு பள்ளியையும், சிங்கையின் திரு. சந்த்ரு அவர்களின் மாடர்ன் மாண்டசோரி நிறுவனம் டெல்லி குர்காவனில் ஒரு பாலர் பள்ளியையும் அமைத்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் பாரதிய வித்யாபவன் பவன்'ஸ் பன்னாட்டுப்பள்ளியை
கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இங்கு CBSE பாடமுறை பின்பற்றப்படுவதால் பெரும்பாலான வட, தென் இந்தியர்கள் (தமிழ் இருந்தாலும் - தமிழர்கள் குறைவு) இங்கு படிக்கின்றனர். இந்தப்பள்ளிக்கு கிடைத்த வரவேற்பினால், இந்தவருடம் இன்னொரு இடத்திலும் தனது இரண்டாவது பள்ளியை ஆரம்பிக்கிறது. டில்லி பொதுப்பள்ளியும் (Delhi Public School) ஏற்கனவே இங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறது. ஐஐடி-யை இங்கு ஒரு கிளை ஆரம்பிக்கவைக்கும் முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே அணணாமலை, பாரதியார், சென்னை, இந்திரா காந்தி பல்கலைக்கழகங்க்ள் இங்குள்ள நிறுவங்கள் மூலம் பட்டக்கல்வி அளித்து வருகிறது. நீண்ட நாட்களுக்குபிறகு இந்திய தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் யுனிசிம்(UniSIM) தமிழ் பட்டக்கல்வியை வழங்க இருக்கிறது. கடந்தமாதத்தில் சென்னை, டில்லியில் சுற்றுலாத்துறை & கல்விஅமைச்சு ஒத்துழைப்பில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள், பலதொழில்கல்லூரிகள், பள்ளிகள் கலந்துகொண்ட ஒரு கல்விக்கண்காட்சி நடந்தது.

சென்னையிலுள்ளவர்கள் சிங்கப்பூர் கல்வி பற்றி மேலும் அறிய தொடர்புகொள்ள:
http://www.singaporeedu.gov.sg/htm/stu/stu010b.htm#2

மேலும் சிங்கை கலவி/கல்விமுறை பற்றி அறிய:
http://www.singaporeedu.gov.sg/

வங்கித்துறை:

இந்த புதிய ஒப்பந்தம் இங்குள்ள DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்தியாவில் அடுத்த 4 வருடங்களில் 15 கிளைகள் வரை ஏற்படுத்த வகைசெய்கிறது. ஏற்கனவே டிபிஎஸ் வங்கி இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் இந்தியாவின் HDFC, ICICI வங்கிகள் டிபிஎஸ்/POSB வங்கிகளுடன் இணைந்து மின்னியல்முறையில் பணமாற்றும் சேவை(tracking வசதியுடன்), தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தும் வசதி போன்றவற்றை வழங்கும். இந்தியன் வங்கி, யூகோ, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஐசிஐசிஐ-யும் ஏற்கனவே ஒரு கிளை ஆரம்பித்து நிறுவனங்களுக்கான கணக்குகளை நடத்தி வருகிறது. இது மேலும் விரிவடையலாம், எளிதாக இங்குள்ள டிபிஎஸ் கணக்குகளிலிருந்து இந்தியாவில் உள்ள கணக்குக்கு இணையம் மூலம் எல்லா பரிவர்த்தனைகளையும் செய்ய இயலும்.

துறைமுகம், விமானங்கள், விமான நிலையம்:

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்கனவே சிங்கையின் துறைமுக ஆணைக்கழகம் (Port Authority of Singapore, PSA) முதலிட்டு நடத்திவருகிறது.

புதிதாக இந்தியாவின் ஏர்சகாரா, சிங்கையின் ஜெட்*ஏசியா நிறுவனங்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னைக்குதான் வழக்கம்போல விலையே தவிர டெல்லி, கல்கத்தாவுக்கு $350க்கெல்லாம் கூட சென்று திரும்ப விமான டிக்கட் கிடைக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓரிருவருடங்களாக பேச்சுவார்த்தையிலும், டெண்டரிலும் இழுத்துக்கொண்டிருக்கும் பெருநகரங்களின் விமானநிலையங்களை தனியார் ஏற்று நடத்தும் முயற்சியில் சிங்கையின் சாங்கி விமானநிலயத்தை நிறுவகிக்கும் Civil Aviation Authority of Singapore (CAAS), இந்தியாவின் பார்தி (Bharti) நிறுவனத்துடன் களத்தில் இறங்கியிருந்தது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி CAAS சற்றே பின்வாங்கி முதலீடு செய்யாமல் ஆலோசனைச்சேவை மட்டும் செய்யப்போவதாகவும், அபுதாபி விமானநிலையத்தை நிறுவகிக்க முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்!

சுற்றுலாத்துறை:

சிங்கப்பூரின் சுற்றுலா வளார்ச்சித்துறை சிங்கப்பூருக்கு இந்தியரை மேலும் ஈர்க்க, திரைப்படத்துறையை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் இவர்களின் (கூட்டு) முதலீட்டில், ஹிருத்திக்ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிக்கும் "க்ரிஷ்" (Krrish) என்றொரு ஹிந்தித் திரைப்படத்தை ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்குகிறார். படத்தின் ஆரம்பிவிழா பூஜை சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஆர்ச்சர்ட் சாலை, லா பா சாட், ராபின்ஸன் சாலை போன்ற இடங்களில் நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமல்லாமல், "The Film in Singapore!" சிங்கப்பூர் என்ற 10 மில்லியன் வெள்ளி திட்டத்தின்கீழ் உலகப்பிரபலங்கள் இங்கு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்தால் ஏற்படும் செலவில் 50 சதவீதம் வரை சுற்றுலா வாரியம் அளிக்கும் என்றுதெரிகிறது. கடந்தவருடத்தில் நடிகை குஷ்பு-வின் நாடகம் ஒன்று இங்கு படப்பிடிப்பு நடத்தியதாக கேள்விப்பட்டேன் - இந்தத்திட்டத்தின் கீழ்.

மருத்துவச்சுற்றுலா, கல்விச்சுற்றுலா போன்ற சுற்றுலாக்கலுக்கும் ஏற்பாடு செய்கிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையிலும் ஒத்துழைக்கும், மருத்துவர் பரிமாற்ற ஏற்பாடு நடந்துவருகிறது.
சென்ற வாரம் இங்கு வருகைபுரிந்த இந்திய சுகாதரத்துறை அமைச்சர் திரு. அன்புமணி கூறும்போது, சிங்கையில் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மருத்துவர்களை அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், புதுவையின் ஜிப்மர் மருத்துவமனை மூலம் மருத்துவர் பரிமாற்றம் நடக்க இருப்பதாகவும் கூறினார். மேலும், உயிரணு, பறைவைக்காய்ச்சல் ஆராய்ச்சியில் ஒத்துழைக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறை:
தொழில்துறையில் பல முன்னேற்றம் நடந்துவருகிறது. இந்தியாவில் தயாராகி இங்கு இறக்குமதி செய்யும் அனைத்துப்பொருளுக்கும் ஒட்டுமொத்த வரிவிலக்கு அளிக்கப்பட இருக்கிறது. இதேவிதமாய் இந்தியாவிலும்.

சிங்கையின் பிரதமர் திரு. லீ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் கூறியது: "இருபக்கமும் உள்ள வர்த்தகர்களுக்கு, பல வாய்ப்புகள் உண்டு அவற்றை பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப்பெருக்கலாம். வானமே எல்லை " என்று குறிப்பிட்டார். உடனிருந்த இந்தியப்பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும் அதை வரவேற்றார்.

பல புதிய இந்திய நிறுவங்கள் இங்கு தொழில் தொடங்கிவருகின்றன. அதேபோல் சிங்கை அரசுத்துறை நிறுவனமான JTC குழுமத்தின் அசெண்டாஸ் நிறுவனம் பெங்களூரில் டாட்டா குழுமத்துடன் சேர்ந்து ஒரு தகவல்தொழில்நுட்ப பூங்காவையும், பின்னர் ஹைதரபாத்தில் தொழில் பூங்கா மற்றும் வீட்டு வசதியையும், சென்னையின் சிறுசேரியில் சமீபத்தில் ஒரு தகவல்தொழில்நுட்ப வளாகத்தையும் கட்டி நிறுவகித்து வருகிறது. மஹிந்திரா சிட்டி வடிவமைப்பிலும் முதலிட்டு, உதவி வருகிறது. இன்னொரு நிறுவனம் சிறுசேரியில் வீடுகள் கட்டுவதாக சேதி.

இங்கு சமீபத்தில் சிங்கப்பூர்-இந்திய வர்த்தக கூட்டமைப்பு டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து நடத்திய சிறந்த இந்திய வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் துணைப்பிரதமர் பேரா. எஸ். ஜெயகுமார் பேசும்போது, இந்தியர்கள் மேலும் சிறப்பாக வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் அதற்கு முன்னெப்போதும் விட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

பிஸ்னஸ்டைம்ஸ் நாளிதழ்- நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஒருவருடத்துக்குமேலாக நடத்திய இந்தியாவின் சமூகம், பலம், பலவீனம், தொழில் வளார்ச்சி, வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படியிலான ஆய்வின் முடிவை வெளியிடும் கருத்தரங்கில், கடந்தவாரம் பேசிய கல்வியமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம்,

"இந்தியாவில் குவிந்துகிடக்கும் வர்த்தக வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வு உயர்ந்து கொண்டிருந்தாலும், அது பற்றிய சரியான தகவலை ஒரு பெரிய இடைவெளி பிரிக்கிறது. இதைக் குறைக்க,

- தகவல் சாதனங்கள்
- சிந்தனையாளர் அமைப்புகள் (தெற்காசிய ஆய்வுக்கழகம், என்.டி.யு ஆய்வுக்கழகம், லீ குவான் யூ பொதுக்கொள்கைப்பள்ளி...)
- நிதிக் கழகங்கள்
- பெரிய எண்ணிக்கையிலான இந்தியக்குடிமக்கள்
- வர்த்தக சபைகள்

என்ற ஐந்து பிரிவினரும் பெருவாரியாக உதவலாம். அவர்களிடமிருந்து வர்த்தகர்கள் இந்த நன்மைகளைப் பெறலாம். இந்தியாவைப் பற்றிய முண்ணனி தகவல் பெட்டகமாக சிங்கப்பூர் விளங்கவேண்டும்."

என்று கூறினார்.

பேச்சின் முழு விபரம்:
http://app.sprinter.gov.sg/data/pr/20051019996.htm

இந்த ஆய்வின் முடிவின்படி இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த மாநிலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பத்து இடங்கள்

1. மகராஷ்டிரா 2. டில்லி 3. தமிழ்நாடு 4. ஆந்திரா 5. கர்நாடகா
6. குஜராத் 7. சண்டிகார் 8. உ.பி 9. பஞ்சாப் 10. ராஜஸ்தான்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சில (இளம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மிலிந்த் டியோரோ அவர்களின் தலைமையில் வந்திருந்தார்கள். அவர்களும் இங்குள்ள அமைச்சர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி வர்த்தகத்தை பெருக்க வழிவகை செய்தனர். இந்தக்கருத்தரங்கில் சிங்கையின் சமூக வளர்ச்சி, இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமச்சர் Dr.விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர்களும், அரசும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிக நல்ல அபிப்ராயமும், ஈடுபாடும் வைத்திருந்தாலும் மக்கள் அளவில் இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. இந்த அடிப்படைஉறவு மேலும் வளர்ந்தால் இன்னும் பல செய்யமுடியும்.

இதனை வலியுறுத்தத்தான் சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம் முடித்து சிங்கை திரும்பியபோது அமைச்சர் தர்மன் கூறியது:
"இங்குள்ளவர்கள் மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய, வளர்ச்சியடைய மனம்மாற்றம் மிக அவசியம்"

இந்தத்தகவல்கள் பெரும்பாலும் இங்குள்ள தமிழ் ஊடகங்கள்வழி அறிந்ததென்றாலும், ஊடகங்கள் செய்திகள் அளிப்பதன்வழி சேவையைச் செய்தாலும், சிங்கையில் 'இந்திய இந்தியர், சிங்கை இந்தியர்' உறவுக்கு மேலும் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

கடந்தவருடம் இதே மாதம், என்னுடைய வலைப்பூ ஆசிரியர் வாரத்தில் நான் எழுதிய சிங்கையில் இந்தியர் நிலை என்ற பதிவுகள் இதற்கு தொடர்புடையதாயிருக்கும்.

அனைவருக்கும் எனது
தீபாவளி மற்றும்
ரமலான் நோன்புப்பெருநாள்
வாழ்த்துக்கள்.

Saturday, October 15, 2005

புதிய தமிழ் யுனிக்கோடு - தமிழக அரசு அறிவிப்பு

புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய உங்கள் கருத்தை தமிழக அரசுக்கு சொல்ல..
என்ற இந்தப்பதிவின் முதல் பதிப்பை ப்ளாக்கர் பகவான் ஸ்வாகா செய்துவிட்டதால், மீண்டும் இங்கே...
(தலைப்பு நீளமாக வைக்கும்போதே நினைத்தேன். கபளீகரம் செய்த தகவல் தந்த பரி-க்கு நன்றி!)

வணக்கம்.

தமிழக அரசு புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய நமது கருத்துக்களை வரவேற்கிறது. இது பற்றிய அறிவிப்பு இங்கு வெளியாகியிருக்கிறது.
http://www.tunerfc.tn.gov.in/

உங்கள் கருத்துக்களை comments-tune@tamilvu.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ
http://www.tamilvu.org/slet/tune_comments/html/tufeedbk.htm என்ற இணையப்பக்கம் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.

அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து யுனிக்கோடை அதிகாரபூர்வ எழுத்துமுறையக்க முயற்சிசெய்வோம். அரசு சட்டத்தின் மூலம் தமிழ் ஊடகங்களையும் யுனிக்கோடுக்கு மாற்ற கோரிக்கை வைப்போம்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கான (ITES) புதிய கொள்கைகளும் (2005) வெளியிடப்பட்டிருக்கிறது.

Thursday, October 13, 2005

அப்படி ஒரு பாடலே.... இல்லையா!?

வணக்கம்.

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

அது சரி... ஏன் இப்படி ஒரு ஆராய்ச்சி என்று யாராவது கேட்பவர்களுக்கு:

இங்கு சிங்கையின் ஒலி 96.8 பண்பலையை வானொலியிலும், இணையம் மூலமாகவும் பலரும் கேட்டிருப்பீர்கள். காலைநேர நிகழ்ச்சி படைப்பாளர் கீதா தன்னுடைய ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் அவருக்கேயுரிய தனித்தன்மையுடன், கலகலப்பாக, சுறுசுறுப்பாக, நேயர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு புதிய சிறப்புடன் படைப்பார்.

அதுபோன்று இனறைய நிகழ்ச்சியில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடல்களை வரிசையாக ஒலிபரப்பினார். ஆனால் "ஔ" என்ற எழுத்துக்கே பாடலே கிடைக்கவில்லை. நேயர்களுக்கும் பெரும்பாலும் தெரியவில்லை - சிலர் அதே ஒலி கொண்ட
'ஹவ் ஆர் யூ'... போன்ற பாடல்களை அனுப்பியிருந்தனர். இறுதியில் அவர், கூலி படத்திலிருந்து 'அவ்வோரா...' (அல்லது அது போன்ற - கையில் குறித்து வைத்திருந்ததைமதியம் கை கழுவிவிட்டேன்:) என்றொரு பாடலை ஒலிபரப்பினார்.

சரி இப்ப மீண்டும் கேள்வி:

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

Saturday, October 01, 2005

்வ்வ்வ சக வலைப்பதிவர்களின் கவனத்துக்கு...

என் இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நாமும் வலைப்பதிகிறோம் என்ற வகையில் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ளவே நீண்ட நாள்களுக்குப்பிறகு இந்த ஒரு பதிவு.

இரு வாரங்களுக்கு முன் இங்கு இரு இளையர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டனர். அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களது வலைப்பதிவில் எழுதியதுதான் காரணம். அவர்கள் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான செய்திக்கு...

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் இங்கு சிங்கையில் இணையத்தில் எழுதும் சக நண்பர்களிடம் இது தொடர்பாக பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் அதன் பின்னர் கடந்த வாரத்தில் இங்குள்ள பள்ளி மாணவ/மாணவிகள் தங்களது ஆசிரியர்கள் மீது பழிகூறி தரக்குறைவாக தங்களது வலைப்பதிவில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு - அவர்களுடைய பதிவுகளை முடக்கி அவர்களையும் 3 நாளைக்கு பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மலேசியாவிலும், சில மாணவர்கள் இதுபோல் அத்துமீற - அவர்களை மாணவர்களுக்கு முன்னால் பொதுவில் தண்டணையளிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி செய்தி வந்து பரபரப்பாக இருப்பதால் இங்கு வானொலியிலும் இது பற்றி செய்திகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நமது தமிழ் வானொலி ஒலி 96.8 லும் சிறப்புக்கண்ணோட்டம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது, சட்ட தகவல்களுடன்.

இன்று Straits Times ஆங்கில ்ன் நாளிதழின் ST PodCastல் இது தொடர்பில் இன்று சிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

்ப் பாடொலிபரப்பு (PodCast:) பயன்படுத்தாதவர்களுக்காக அந்த ஒலிபரப்பின் எம்பி3 வடிவம் இங்கே:

பிரபலாகும் வலைப்பதிவுகள்...

வலைப்பதிவுகளைப் பற்றி வலைப்பதிவாளர்கள்

இது தொடர்பான ஒரு நேர்காணல்/கருத்துப் பரிமாற்றம்

அதனால், நாம் எழுதும் ஒவ்வொன்றும் பொதுவில் வைக்கிறோம் என்ற உள்ளுணர்வோடும், எச்சரிக்கையோடும், மனச்சாட்சியோடும் நமது படைப்புக்களை தொடர்வோம் - அது பதிவாக இருந்தாலும், பின்னூட்டமாக இருந்தாலும்.