Tuesday, February 08, 2005

இந்த சனியனைத்தெரியுமா!?

தொலையழைப்பான்(பேஜார்...), கைத்தொலைபேசி என்ற வரிசையில் புதிதாக வலம்வந்துகொண்டிருக்கும் BlackBerry - ப்ளாக்பெர்ரி என்ற இந்த சனியனை உங்களுக்குத்தெரியுமா?



அச்சச்சோ உங்கள் இடுப்பில் ஏற்கனவே அது தொத்திக்கொண்டுவிட்டதா... என் ஆழ்ந்த அனுதாபங்கள் (அது என்னை தொற்றிக்கொள்ளுமட்டும்). இதுபோன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை தரக்குறைவாகப் பேசுவதா என்றும் யாரும் உணர்ச்சிவயப்பட்டால், நீங்கள் பாக்கியசாலிகள்.

சரி சொல்லவந்த விடயத்தை சொல்லிவிடுகிறேன். இதுபோன்ற கருவிகளால் பயன் மிக அதிகம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால், அதே
நேரத்தில் இந்த கருவிகளால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. இது என்னைப்போன்ற அலுவலகரீதியான பாரம் சுமப்பவர்களுக்குப் புரியும் என்று
நினைக்கிறேன். ஒருகாலத்தில் அலுவலகத்தில் நீண்டநேரவேலை என்றாலும், 10 - 12 மணி நேரம் வேலையென்றாலும் அலுவலகத்தை விட்டு வீடு சென்றால் குறைந்தபட்சம் வீடு சென்று சேரும் வரையாவது (வீட்டுத்தொலைபேசியில் பிடிக்கும்வரையாவது) நிம்மதி. இப்போதெல்லாம் அப்படி இல்லை. அலுவலகம்விட்டு வீடு, வேறேங்கும், உலகில் எங்கு சென்றாலும் துரத்தி துரத்தி தொல்லை தருகிறது, இதுபோன்ற தொடர்புச்சாதனங்கள். என் பணிசார்ந்த வங்கியின் சுலோகம் 'xxxx Never Sleeps...' அதை நாங்கள் புரிந்துகொள்வது - அதன் ஊழியர்களையும் தூங்கவிடுவதில்லை என்பதுதான். பொதுவாக என்னுடைய தொலையழைப்பான், கைத்தொலைபேசியை ஒலி எழுப்பவதற்குப் பதில் அதிர்வு எழுப்பும் வகையில் வைத்திருப்பது வழக்கம். இப்போதெல்லாம், பல வேளைகளில் அழைப்பேதும் வராதபோதும் கூட தொடையில் அதிர்வேற்படுகிறது... இன்னும் உச்சம் அதை மாட்டியிருக்காத வேளைகளில்கூட சிலநேரம் அதிர்வை உணர்கிறேன். என்னைவிட, வீட்டில் மனைவிக்கும், பிள்ளைக்கும் இந்தக் கருவிகள் மீது வெறுப்பதிகம். இந்த தலைப்பு கூட, என் மனைவி அடிக்கடி சொல்லும் அந்த சனியனைத் தூக்கித் தூரப்போடுங்க என்பதன் விளைவுதான்.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...?

2 comments:

Chandravathanaa said...

ஆத்திரம் அவசரம்... என்று எந்தக் கணத்தில் எல்லாமோ உதவுகிறது.
அதேயளவுக்கு உபத்திரமும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

Anonymous said...

Not only employees Anbu, even they will not allow the vendors to sleep.
by,
one poor guy
worked in their maintance :-(