Friday, February 11, 2005

சிங்கை வலையுலக சந்திப்பு

நண்பர் மூர்த்தி நேற்று சிங்கையில் நடந்த சந்திப்பு பற்றி சிங்கை இலக்கிய சந்திப்பு என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்தார்கள். இருந்தபோதிலும் அவர் கவனிக்க/பதிய தவறிய சில விஷயங்களை இடையிடையே இங்கு சேர்த்து பதிவை முழுமையாக்க முயற்சித்திருக்கிறேன்:)

அவருடைய முழுப்பதிவையும் அவரது அனுமதியில்லாமல் இங்கு காப்பி செய்திருந்தாலும், என்னை மூர்த்தியோ, வேறெந்த வழிப்போக்கனோ(ரோ) கேள்விகேட்க முடியாது. அப்படி கேட்க நினைப்பவர்களுக்கு இப்போதே சொல்லிவிடுகிறேன்:
"பல தமிழ் வலைப்பதிவுகள் இதைச் செய்கின்றன."

இனி மூர்த்தியின் பதிவும் ஆங்காங்கே விடுபட்ட விஷயம் சிவப்பு வண்ணத்திலும்....

நேற்று மாலை 4.30க்கு ஆரம்பித்த இந்த சதுர மேஜை மாநாட்டில் மூர்த்தி, எம்கேகுமார், அன்பு, ஈழநாதன், விஜய், ஜெயந்திசங்கர், நா.கண்ணன், அருள்குமரன், மா.கோ அவர்கள், தாமரைக் கண்ணன், செந்தில்நாதன், கவிஞர் பாலு.மணிமாறன், சித்ராரமேஷ்,
ரமேஷ், ராம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நான்*: தண்ணி (வெறும் பச்சைத்தண்ணிதேன்:)

இலக்கியம் தவிர மற்ற எல்லாம் பேசும் இலக்கிய(!) கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக்கூட்டத்தில் அனைவரும் ஆக்கபூர்வமாகவே பேசினார்கள். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கவிஞர்.பாலு.மணிமாறன் தனது கவிப்பயணத்தை தொடங்கிய காலம் முதல் மலேசியாவின் இதழ் நடத்தியது பின்னர் சிங்கை இலக்கிய வட்டத்தில் தம்மை ஐக்கியமாக்கியது பற்றியும் பேசினார். அவர்தம் பேச்சினில் கடற்கரைச்சோலை கவிமாலை பற்றியும் பிச்சினிக்காடு இளங்கோ பற்றியும் பெரியவர் க.து.மு.இக்பால் பற்றியும் நினைவு கூர்ந்தார்.

நான்*: குளோப் ஜாமூன் (இந்தக் குளோப் கொஞ்சம் சிறியதுதான். நல்ல மெதுவா, அளவான இனிப்போடு, நன்றாக பாகில் ஊறி பக்குவமாக இருந்தது. நன்றிங்க ஜெயந்தி:)

நிறையப் பேசுவார் என நான் எதிர்பார்த்த அன்பு அவர்கள் தன்னடக்கமாக தன்னைப் பற்றிச் சொன்னார்கள். இதழோரம் புன்னகை எப்போதும் சிந்தியபடியே பேசினார். தனது வலைப்பதிவு குப்பை மட்டுமல்ல...கிளறினால் நிச்சயம் ஏதாவது கிடைக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான்*: சமோசா (கூச்சமே படாம எனக்குப்பிடித்த புதினா சட்னி, அப்புறம் ஏதோ சாஸ் தொட்டுண்டேன். வளையல் செஞ்சு போட்ற அளவு இல்லேன்னாலும், வழக்கம்போல சமோசோவுக்குரிய டெஸ்ட்டோடு இருந்துச்சு:).

அடுத்ததாகப் பேச எழுத கண்ணன் அவர்கள் சாதிகள் வாரியாக பேச்சுமொழி மாறுபடும் என்றார்கள். நான் அவரிடத்தில் இருக்காது... இல்லவே இல்லை என பழைய பல்லவியைப் பாட "இப்படித்தான் என் பதிவிலும் யாரோ பின்னூட்டமிட்டார்!" என்றார். நான் சொன்னேன் அவரிடத்தில்,"ஆமாம்...உங்களைப் போன்றே இன்னொருவர் என்மடல் என்ற வலைப்பதிவில் தென்கொரியாவில் இருந்து கண்ணன் என்று ஒருவர் எழுதினார். அவருக்கு நான் மறுப்பு மொழியிட்டேன்" என்றேன். ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்துகொள்ளாமலே பேசப்போக மற்றவர்கள் நகைத்தனர். பின்னர் புரிந்துகொண்டோம். பின்னர் பேச்சு வட்டார வழக்கு பற்றித் திரும்பியது. பிராமண பாஷை பற்றியும் பேசினோம். பல வட்டாரங்களில் பேசப்படும் தமிழ் மொழியைப் பற்றி அலசினோம். அதன்பின்னர் கண்ணன் அவர்கள் தமது ஆரம்பகாலம்(தமிழ்.நெட்) முதலான தமிழ்ப்பணியைப் பற்றி விவரித்தார்கள். தமிழ் இணைய மாநாடு பற்றியும் தமிழ் எழுத்துரு கண்டுபிடித்த தமது முன்னாளைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். சிதிலமடைந்து கிடக்கும் அங்கோர்வாட் கோயிலைப்பற்றிய தனது வேதனையை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். வரலாற்றுக் கட்டுரைகளை இன்னும் தமிழ்.நெட்டில் இணைக்கும் தமது முயற்சிகளைப்பற்றியும் சொன்னார்கள்.

நான்*: குட்டி வளைய முறுக்கு, மிக்ஸர் (கண்ணன் சார் பேச்சு சுவாராசியத்தில் ரொம்ப நல்லாருந்துச்சுது, ஹால்டிராம் மிக்ஸர் கூட. தோசா கார்னர் முறுக்கு அருமை, நமக்குப்பிடிச்ச ஐட்டம்னுதானே அத வாங்கினேன்:)

அதன்பின் தோழர் செந்தில்நாதன் பேசினார். இலக்கியத்தில் தமக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட அவர் தாம் நல்ல ஒரு பார்வையாளர் மட்டுமே என்றார். அன்றாடம் தாம் வலைப்பதிவுகள், மரத்தடி, ராயர் போன்ற குழுமங்களுக்கு வருவதாகவும் ஆனால் கருத்துக்கள் எதுவும் எழுதுவதில்லை என்றும் சொன்னார். அவரை வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து எழுதுமாறு எல்லோரும் அன்போடு கேட்டுக் கொண்டோம்.

நான்*: சீடை சைஸ்ல ஆனா சதுரவடிவில கிடைக்கும் கிடைக்கும் ஒரு இனிப்பு வஸ்து, பிஸ்கட்னு கூட சொல்லலாம் (அதுவும் தோசா கார்னரில் கிடைக்கும் என்னோட ஃபேவரிட்...:)

அடுத்து பேச எழுந்த அல்வாசிட்டி விஜய் தான் அமெரிக்காவில் பணிபுரிந்தபோது நண்பர்களோடு சேர்ந்து அல்வாசிட்டி ஆரம்பித்ததாகச் சொன்னார். தற்போதைய வலைப்பதிவிலும் அவர்கள் எழுதுவதாகவும் ஆனால் தாமே நிறைய எழுதுவதாக சொன்னார். அல்வா யாருக்குக் கொடுத்தீங்க என்று சித்ரா கேட்க, "இப்போது அவரின் பேச்சே அல்வாதான்" என்று கண்ணன் அவர்கள் சிரிக்க அனைவரும் சிரித்தோம்.

நான்*: எனக்குப்பிடித்த மசால் கடலையை யாராவது பிரிப்பாங்களான்னு சீரியஸா பார்த்துட்டிருந்தேன். (அப்படி அப்பப்போ சீரியஸ் போஸெல்லாம் கொடுத்துட்டு இருந்தேன்... சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும்போது மட்டும்தேன் சிரிச்சு/வழிஞ்சுட்டிருந்தேன்.... அதெ பெர்சா மூர்த்தி 'இதழோரப் புன்னகை' ன்னு கவிதை மாதிரி எழுதியிறுக்கிறார், எனக்கு தற்பெருமை பிடிக்காதென்ற உண்மை தெரிந்தும்:)

ஏதாவது கிராதகமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட மூர்த்தி எழுந்து "தான் ஒரு கணினி வன்பொருள் பொறியாளன் என அறிமுகம் செய்துகொண்டு 'எழுத்தைத் தவிர மற்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதாக'ச் சொன்னார்! மற்றவர்களுக்கு வியப்பு. தாம் நல்ல படைப்புகளாகத் தருவதில்லை என்று ஒப்புக்கொண்ட அவர் அன்புவைபோன்ற நல்ல பதிவுகள் எழுதுவது மிகச் சிலரே என்றார். அவர்தம் பேச்சில் பின்னூட்டம் எப்படி ஒரு எழுத்தாளருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது என காரசாரமாகப் பேசினார். பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளருக்கு மிகவும் அவசியம் என ஒருமனதாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது! இடையில் குறுக்கிட்ட சித்ரா ரமேஷ் அவர்கள்,"வழிப்போக்கன்" பற்றிய பழைய நினைவுகளைக் கிளறினார். அதற்கு கமல்மேல் தனக்கு வெறுப்பு இல்லை என்றும் கமலுக்குபின் அரவிந்தசாமி, மாதவன் என்றதாலேயே விட்டுக் கொடுக்காமல் வாதிட்டதாகச் சொன்னார். அதன்பின் தமது முத்தமிழ்மன்றம் பற்றியும் சொன்னார்.

நான்*: மசால் கடைலை போலவேதான், எனக்குபிடித்த அந்தக் காராச்சேவும். கடைசிவரக்கி பிரிச்சே தொலைக்கல... (வருத்தந்தாண்ணே.... நாமளே எல்லாத்தையும் பிரிக்க முடியுமா!?). இதுல்ல இன்னும் உச்சம்... குமார் இருந்த எல்லா கவரையும் (வேணும்ணே)
தூக்கிப்போட்டுட்டு - கடைசியா பிரிக்காத சேவையும், கடலையையும், நீங்களே எடுத்துட்டுப்போய்டிரீங்களா அன்புன்னு ஒரு கடைமைக்கு கேட்டார். நானும், பராவல்ல நீங்க ரூம்லதான இருக்கிறீங்க நீங்க எடுத்துட்டுபோங்கன்னு சொன்னேன் (பெரிய தானப்பிரபுவாட்டம்). ஒண்ணும் பிரிச்னையில்லேயேன்னு பேச்சுக்கு ஒரு கேள்வி கேட்டுட்டு (என்னோட பதிலுக்கூட காத்திருக்காம) பேக் பண்ணிட்டார். (குமாரு ... நல்லா சாப்பிட்டு நல்லா இருங்கோ.... இது வாழ்த்துப்பா, வயித்தெல்லாம் ஒண்ணுஞ்செய்யாது, டோண்ட் ஒரி:)

அடுத்ததாகப் பேசிய ரமேஷ் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார். இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர். அவர்தம் பேச்சில் சாருவும், ஜெயமோகனும் அடிக்கடி வந்துபோனார்கள். சிங்கையில் நடக்கும் அனைத்து இலக்கியக் கூட்டங்களிலும் இவரை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டது இதுதான் முதல்முறை.

நான்*: பிரிக்காத மசால் கடலையயும், காராச் சேவையும் பார்த்துண்டே - மீண்டும் ரிங்க்முறுக்-ஸ்

சித்ரா ரமேஷ்! இவரைத் தெரியாத சிங்கப்பூர் தமிழர் இருக்கமுடியாது. ஞாயிறு தமிழ்முரசைத் திறந்தால் இவரின் படைப்பு ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். கவிதை, கதை, கட்டுரை என எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். திண்ணையில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தோழியர் பதிவில் இவரின் பின்னூட்டங்களை நிறைய பார்க்கலாம். கூச்சமின்றி அனைவரோடும் நன்கு கலகலவெனப் பேசினார். இவரை வலைப்பூ உலகத்துக்கு வருக வருக என வரவேற்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

நான்*: ஆறிப்போன டீ (சாரி... பேச்சு முறுக்கில்(இது வேற முறுக்குண்ணே) நான் ஆறவைத்த டீ:)

தன்னடக்கமாகப் பேசினார் மூத்த சகோதரி ஜெயந்தி. தனது கதைகள் பற்றி சொன்னார். தமது கதைகளில் நான் என்று ஆரம்பித்து எழுதினால் அது உண்மையில் நான் அல்ல என்றும் தாம் அந்த கதாபாத்திரமாகவே மாறி தம்மை அந்த இடத்தில் வைத்துப் பார்த்து கதை எழுதுவதால் அக்கதைகளில் உயிரோட்டம் இருப்பதாகக் கூறினார். அதன்பின்னர் சிங்கப்பூர் இளையர்பற்றிய தமது கட்டுரையின் சிதைவு பற்றியும் விகடன் ஆசியர்குழுமம் பற்றியும் தனது கசப்பு அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறார். நல்ல சிந்தனைவாதி. அற்புதமான பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்!

நான்*: அந்த குட்டி பிஸ்கட்

ஈழநாதன் தனது எழுத்து அனுபவங்களை வரிசைப்படுத்துமுன் தாம் இலக்கிய உலகில் சின்னவர் என்று நகைப்பூட்டினார்.
அதன்பின்னர் தனது கவிதைகள், படிப்பகம், சலனச்சுருள் பற்றிச் சொன்னார். அவர்தம் பேச்சில் பத்மநாப அய்யர் பற்றியும் நிறையச் சொன்னார். அய்யர் என்பதைப் பலர் தவறாகப் பேசியதாகச் சொன்னார். தச்சு வேலை செய்பவர் தச்சர் என்பதுபோல புரோகிதம் செய்பவர் அய்யர். எனவே அது தவறில்லை என்றார். உடன் குறுக்கிட்ட கண்ணன் அவர்கள் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்ற தனது அனுபவத்தை விளக்கினார். கமல் போன்றே பார்ப்பணீயத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர் அய்யர் என்றார். ஈழத்து இலக்கியங்களைப்பற்றியும் இலக்கிய வாதிகளைப் பற்றியும் நிறையப் பேசினார்.

நான்*: ஹால்டிராம் மிக்ஸர்

வெள்ளை மனதோடு முத்துப்பல் காட்டி அடிக்கடி சிரிக்கும் எம்கேகுமார் அவர்கள் தாம் வெண்ணிலாப் பிரியன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் பற்றிச் சொன்னார். தனது வலைப்பூ பற்றியும் தமிழோவியத்தில் தாம் எழுதும் "மஜூலா சிங்கப்பூரா" தொடர் பற்றியும் சொன்னார். சிங்கப்பூரைப்பற்றி இதற்கு முன் எழுதிய தோழி ஜெயந்திசங்கர் அவர்களே பாராட்டினார். இது நல்ல தொடர் என்று நாங்கள் அனைவரும் பாராட்டினோம். தோழி ஜெயந்தியின் கட்டுரையையும் குமாரின் கட்டுரையையும் கண்ணன் அவர்கள் தமது வலையில் ஏற்றி பத்திரப்படுத்த அனுமதி வேண்டினார்கள். தோழி அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். குமார் அவர்களின் கட்டுரை இன்னும் முழுமை பெறவில்லை. பெற்றதும் ஒப்புக்கொள்வார்.

நான்*: அதே முறுக்கை எப்படித்தின்றதுன்னு... அதைக்கொஞ்சம் எனக்குப்பிடித்த புதினா சட்னில டிப் பண்ணி கொஞ்சம்....

தான் கணினி படிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே ஆரம்பித்த அருள்குமரன் தனக்கும் கணினிக்கும் உண்டான தொடர்பு பற்றி ஆரம்பம் முதல் விளக்கினார். தாம் செய்த அசைபடங்கள், மேக்ரோமீடியா ப்ளாஷ் படங்கள் பற்றி நிறைய சொன்னார். சென்ற தமிழ் இணைய மாநாட்டில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றியும் விளக்கினார். தாம் செய்த, செய்து கொண்டிருக்கும் மென்பொருள் முயற்சிகளை அச்செடுத்து கொண்டு வந்திருந்தார். தாம் கண்டுபிடித்த வித்தியாசமான தூதுவர் முயற்சிகளையும் தமிழ்மென்பொருள் உள்ளீடு இல்லாமலேயே தூதுவரில் தமிழில் எழுத முடியும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். ஆச்சர்யத்தில் வாய்பிளந்தேன். முழு ஈ தங்குதடையின்றி உட்சென்று வந்தது. இதுபற்றி தனியாக பட்டறை ஒன்றை நடத்துவது என்று தீர்மானித்தோம். நா.கண்ணன் அவர்கள் ஊக்கமளித்தார்.

நான்*: திடீர்னு சித்ரா ரமேஷ், ஜெயந்தி எதோ தாங்களுக்குள்ளே பேசிண்டே எழுந்து நடக்க ஆரம்பிக்க, கண்ணன் சாரும் கொஞ்சம் புரிஞ்சா மாதிரி புது எடம், எங்கிருக்கோன்னு பின்னாடியே போனார். அருள் பேசிண்டிருக்கும்போது கூட்டம் கலைஞ்சதால கொஞ்சம் மிரண்டார், ரமேஷ் பயோ-பிரேக்னு ஏதோ சொன்னதால அப்படியே சிரிச்சுண்டு எல்லாரும் எழுந்து காலார அந்தப்பக்கம் நகண்டார்கள். அப்பக்கூட நான் எழுந்திருக்கிலையே..... கடைமையே கண்ணாய், விட்டகுறை தொட்டகுறையைத் கவனித்தேன்:)

அடுத்து பேச எழுந்த தாமரைக்கண்ணன் அவர்கள் ஏழாவது அறிவு பற்றியும் எட்டாவது அறிவு பற்றியும் பேசினார். அதற்கு கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் துணைக்கு அழைத்தார். "எங்கே போய்விடப்போகிறீர்கள். அகத்தியர்தானே..நான் அங்கேயும் இருக்கிறேன்..விரைவில் வருகிறேன்" என விஜய் காதிற்குள் மூர்த்தி மெல்ல கிசுகிசுத்தார்! எக்ஸ்ட்ரா பவர் பற்றி உங்களுக்கு எப்படித்தெரியும் என சித்ரா அவர்கள் கிடுக்கிப்பிடி போட தமக்கு கற்பனையில் தெரியும் என்றார்! அகத்தியரில் தாம் எழுதிவரும் கட்டுரைகள் பற்றி விளக்கினார். தமது பேச்சினூடே தனக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த மா.கோ அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

நான்*: என்ன செய்றது ... மீண்டும் பச்சத்தண்ணி.

சிங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மா.கோ அவர்கள் அடுத்து பேசினார். முரசு அஞ்சல் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தமது குளோபல் தமிழ் இணையம் பற்றியும் சொன்னார். தமது பேச்சில் தமிழ் உலகம் பழனி அண்ணாவை நினைவு கூர்ந்தார். ராணுவத்தில் காப்டனாக இருந்து மேஜர் ஆனது பற்றியும் சிங்கையின் இலக்கியப் பயணம் பற்றியும் விளக்கினார். அவர் தனது பேச்சில் நியூமராலஜி பற்றிச் சொன்னார். ஒருவரின் பெயர் கொண்டே அவரின் குணநலன்களைச் சொல்லிவிடமுடியும் எனவும் பிறந்த தேதி கொண்டும் தன்னால் எல்லாம் கூறமுடியும் என்றும் சொன்னார். ஒன்றுமே இல்லாமல் ஒருவரோடு பேசிப்பார்த்தும் தன்னால் அவர்களின் பண்புகளைக் கூறமுடியும் என்றும் ஆணித்தரமாகச் சொன்னார். தமிழ் இலக்கிய உலகில் தமக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். என்ன செய்ய? வேதனையாகத்தான் இருந்தது.

நான்*: மூர்த்தி காலையில் வேலைக்குபோகணும், கிளம்புறேன் என்றார். அப்புறம் நாங்கெல்லாம் எங்கோ போறோம்னு நினைச்சேன்:) அப்புறம் பார்த்தா தலிவரு இப்போ மலேசியா/ஸ்குடாய் ஜொகூரில் இருக்காராம். வாரயிறுதியில் மட்டும்தான் இங்கு சிங்கப்பூர் விஜயமாம்.

இப்போதுதான் எனக்குப்பிடித்த ஒரு மிக மிக சந்தோசமான ஒரு அறிவிப்பை சித்ரா ரமேஷ் வெளியிட்டார். இருங்க... அப்படியே எல்லாரும் சரவண பவன் போய் டிஃபன் சாப்பிடலாம்.... ஆஹா... இன்பத்தேனாய் பாய்ந்தது.

மொத்தத்தில் இந்த இலக்கிய சந்திப்பு பயன்மிக்கதாய் அமைந்தது எனலாம். நிச்சயம் வருவார் என நம்பியை நம்பினோம். அவரும் மானசாஜென் என்றழைக்கப்படும் ரமேஷ்சுப்ரமண்யம் அவர்களும் நட்டு என்றழைக்கப்படும் பனசை நடராஜன் அவர்களும் தோழி ரமாசங்கரன் அவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வருத்தத்தைத் தந்தது. அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட வேலைப்பளுவால் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான்*: இதுவரை உட்கார்ந்து எடுத்தது போதாதுன்னு நின்னுண்டு புகைப்படம் எடுத்துட்டு இருந்தாங்க. இருந்தாலும் நம்ம கண்ணு அந்த பிரிக்காத மசால கடலை மற்றும் காராச்சேவு மேல்தான். அப்போ எனக்கும் குமாருக்கும் நடந்த டயலாக்கையும் இறுதியில் (அவரே) செய்துகொண்ட ஒப்பந்தத்தையும்தான் மேலே படிச்சிட்டீங்களே:)

சிற்றுண்டி தயார் செய்த சித்ராரமேஷ் அவர்களுக்கும் இடம் தந்து உதவிய அவரின் தம்பி ராம்ஜி அவர்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நேரமாகிவிட்ட காரணத்தால் நானும், மாகோ அவர்களும் தாமரைக் கண்ணன் அவர்களும் வெளியேறினோம். மற்றவர்கள் அனைவரும் இரவு உணவில் கலந்துகொண்டார்கள். சிங்கை நண்பர்கள் சந்திப்பு மட்டுமே என நினைத்திருந்த இந்த கூட்டம் உலகக் கூட்டமாகிவிட்டது. நான் மலேசியாவில் இருந்து சென்றிருந்தேன். கண்ணன் அவர்கள் தென்கொரியாவில் இருந்து வந்திருந்தார்கள். இரவு 8.30 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது. நான்கு மணி நேரமும் எனது கேமராவை மறந்து(!) அமர்ந்திருந்த என்னால் புகைப்படம் இணைக்க முடியவில்லை. தோழர் எம்கேகுமார் இணைப்பார்.

நான்*: மூர்த்தி, ஜெயந்தி, மாகோ, தாமைரக்கண்ணன், பாலு அல்லாம் கிளம்பிட்டாங்க. அப்படியே பொடிநடையா சரவண
பவனுக்கு நடையைக்கட்டினோம். அங்கு ஸ்வாக பண்ணியது: மசால் தோசை சொல்லி இல்லாததால் கிடைத்த 'நெய் ரோஸ்ட்', டிக்ரீ காஃபி, வெங்காய பஜ்ஜி. அப்புறம் எதிர உட்கார்ந்து எனக்குப்பிடித்த நாணையும், மட்டர் பன்னீரையும் அருள் ஒருகை பார்த்துக்கொண்டிருந்தார். அதையும் பார்த்துக்கொண்டே எனக்குக் கொடுத்த பணியை இனிதே நிறைவு செய்தேன்.

இப்போ சொல்லுங்க நீங்களே... என்னோட இத்தனை வேளைக்கிடையே, நான் பேசலைன்னு மூர்த்தியோ மற்றவரோ வருத்தப்பட்டால் நான் என்ன செய்யமுடியும். அவர்களுக்கு இந்த வலைப்பதிவு(லகம்) தக்க பதில் சொல்லும் என்று கூறிவிட்டு கடமையா அடுத்த சந்திப்ப எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியதுதான்.

எனிவே... மூர்த்தி, சித்ரா, குமாரு, ஜெயந்தி மற்றும் அனைவருக்கு ரொம்போ தேங்க்ஸ். இதுமாதிரி அடிக்கடி மீட் பண்ணுங்க, நமக்கு சும்மா ஒரு மெயில் தட்டினா ஓடியாந்து நிப்பேன்:)

இதுதவிரவும் மக்கள் சீரியஸா பேசிண்டிருந்த பல விஷயங்கள் காதில்ல விழுந்துச்சு அதை இன்னொரு பதிவில்.

பி.கு:
* நான் -

நான், இலக்கணத்தில் ஒருமை, நடைமுறையில் பன்மை. நான் எனப்படுவது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம் - கவியரசு வைரமுத்து.

என்னுடைய கதையில் வரும் 'நான்' எல்லாம் நானில்லை. அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி அந்தப்பாத்திரமாக மாறி நானாகவே பேசும்போது, அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக கொண்டு வர இயல்கிறது - சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்.

இதுல்ல வர நான்- லாம் நாந்தாங்க. அந்த கடைசி நாண் தவிர:)

2 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மூர்த்தியின் வலைப்பதிவை வாசித்ததும் என்னைச் சுற்றி ஒரே புகைமூட்டம்! ;)

ஆனா, இப்ப ஒருமாதிரி கொலைவெறிவந்திருக்கு. இப்பிடி காலங்காத்தால(ஆறு மணிகூட ஆகல) இப்பிடி

'குட்டி வளைய முறுக்கு' - அதுல வேற முறுக்கை புதினாச்சட்னியில் டிப் ப்பண்ணுறாராம். :ம்கும்:

'சீடை சைஸ்-----'

'மசால் கடலை'

'காரா சேவ்'

அப்புறம் அந்த சரவணபவன் - உங்களுக்குக் கிடைக்காத(ஹை ஜாலி!) மசால் தோசை, நெய் ரோஸ்ட், சரவணபவன் ஸ்பெஷல் காப்பி, வெங்காய பஜ்ஜி[இதை சரவணபவனில் சாப்பிட்டதில்லை. ஆனா அதுக்காக விட்டுர முடியுமா???]

இப்படியெல்லாம் எழுதிய உங்களைக் கொலைசெய்யாமல் வேறென்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லிருங்க.

ஒரு வழி இருக்கு: அந்த தோசா கார்னர்ல வாங்கின உருப்படிகளை ·பெட்-எக்ஸ்ல அனுப்பி வைக்கிறது!

யெம்கே: உங்களுக்கு இன்பமான வயிற்றுவலி வரக்கடவது!

-அரட்டைத் திலகம்

தகடூர் கோபி(Gopi) said...

சாப்பாட்டு விஷயத்துல கூச்சமெல்லாம் எதுக்குங்க.. நான் மட்டும் அங்க இருந்திருந்தா அன்புக்கு நல்லா உதவியிருப்பேன். (என்ன இங்க வந்து அதுக்கும் சேத்து வச்சி பொலம்பியிருப்பாரு :-P )