Wednesday, August 11, 2004

சிங்கப்பூர் - நேற்று இன்று நாளை...

சிங்கப்பூருக்கு இது மிகவும் முக்கியமான வாரம்...
1965ல் மலேயாவிலிருந்து (இப்போது மலேசியா) பிரிந்ததில் இருந்து சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ பிரதமர் பதவிவகுத்து வந்து ஏறக்குறைய 25 வருடங்களுக்குப்பின்னர் திரு கோ சோக் டோங்-கிடம் 28 நவம்பர் 1990ல் ஒப்படைத்து விட்டு, பிரதமர் கோவின் அமைச்சரவையில் 'மூத்த அமைச்சர்' பதவியில் இருந்து வந்தார்.

நேற்று...

14 வருடங்களுக்குப்பிறகு, நேற்று 10/ஆகஸ்ட்/2004 காலை 10 மணியளவில் (ஏற்கனவே திட்டமிட்டபடி) அதிபர் எஸ் ஆர் நாதன் அவர்களை சந்தித்து தனது பதவி விலகலைக் கொடுத்துவிட்டு புதிய பிரதமராக தனது அமைச்சரவையில் முதல் துணைப்பிரதமராக இருக்கும் திரு லீ சியான் யாங் - அவர்களை பிரதமராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அதனை ஏற்று காலை 11 மணிக்கு தன்னை சந்தித்த திரு லீயை அதிபர் நாதன் புதிய பிரதமராக பதவியேற்கும்படி கூறி புதிய அமைச்சரவையையும் அமைக்கப் பணித்துள்ளார்கள்.

அதன்படி சிறிது நேரத்தில் தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை, புதிய பிரதமாராகப் பதவியேற்கும் திரு லீ வெளியிட்டார். அதில் அவர் இது வரை வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை மட்டும் வைத்துக்கொண்டு, புதிய நாணய வாரியத் தலைவராகவும் (Monetary Authority of Singapore - MAS), மூத்த அமைச்சராகவும் பிரதமர்பதவி துறந்த திரு கோ பதவியேற்கிறார். இதுவரை மூத்த அமைச்சர் பொறுப்பிலிருந்த தனது தந்தைக்கு 'மதியுரை அமைச்சர்' (Minister Mentor) என்ற பதவி கொடுத்துள்ளார்கள்.

எப்போதும்போல திரு டோனி டான் - துணைப்பிரதமராக திரு லீயின் அமைச்சரவையிலும் தொடர்வார்கள். (திரு நெடுஞ்செழியனை ஞாபகம் இருக்கிறதா!?) இவர் அடுத்த ஜீனில் பதவி ஓய்வு பெரும்போது இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் திரு வோங் கான் செங் துணைப்பிரதமராவார்.

திரு கோவின் அமைச்சரவையில் சட்ட, வெளியுறவு அமைச்சராக இருந்த திரு ஜெயக்குமார் அவர்கள் துணைப்பிரதமர் ஆகிறார்கள். அத்துடன் தான் பார்த்துவந்த சட்டம், வெளியுறவு கொள்கையையும் (மட்டும், வெளியுறவு திரு. ஜார்ஜ் யோவுக்கு...) தொடர்வார்கள்.

திரு தர்மன் சண்முகரத்னம் முழுக் கல்வியமைச்சர் பதவியுடன், நாணய வாரியத் துணைத்தலைவர் பதவியும் கூடுதலாக வகிப்பார்கள்.

திரு பாலாஜி சதாசிவம் துணை சுகாதார அமைச்சராகிறார்.

திரு விவியன் பாலகிருஷ்ணன் - சமூக, இளையர், விளையாட்டுத்துறை

மேலும் சிலர் பதவிஉயர்வு பெற்றுள்ளார்கள்,
சில புதியவர்கள் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்கள்
சிங்கை வரலாற்றில் முதன்முதலாக
பெண் அமைச்சர்கள் இருவர் (திருமதி லிம் லீ ஹிவா, திருமதி யூ ஃபூ யீஷுன்) பதவியேற்க இருக்கின்றனர்.

இன்று

நாளை இரவு பதவியேற்க ஏற்பாடு நடந்து வருக்கிறது,
(நான் இங்கு பதிந்து கொண்டிருக்கிறேன்...)

நாளை

திரு. லீ சியான் யாங் இரவு 8 மணியளவில் பிரதமர் பதவியேற்க உள்ளார்கள். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும். திரு லீயைப்பற்றி எழுதும்போது நம்ப மு.க.ஸ்டாலின் ஞாபகம் வராமலிருந்தால் உலக அரசியல் தெரியாதென்றாகிவிடும். இங்கும் வெளிப்படையாக இல்லையென்றாலும் அந்த முணுமுணுப்பு உண்டு. அதேபோல் இங்குள்ள Straits Times பத்திரிக்கையில் கருத்துக்கணிப்பு நடத்தி திரு லீ பிரதமர் பதவிக்கு முழுத்தகுதி உடையவர், முன்னாள் பிரதமர்/முன்னாள் மூத்த அமைச்சர் மகன் என்று இல்லாவிட்டாலும் அவர் பதவிக்கு தகுதியுடையவர் என்று முடிவு தெரிவித்தது.

எது எப்படியிருந்தாலும், புதிய பிரதமர் சிங்கப்பூரை புதிய உட்சத்துக்கு கொண்டுசெல்வார் என்று நம்பலாம். வாழ்த்துக்கள்.

(இப்போதைக்கு இது போதும்... ஆங்காங்கே ஹைபர்லிங்க் கொடுக்கலாம்னு நெனச்சேன், அவசரத்துல முடியல - நாளைக்கு முடிந்தால் இணணக்க முயற்சிக்கிறேன்).



No comments: